📝அமெரிக்காவில் உள்ள Hartsfield–Jackson Atlanta International Airport-ல்…
அமர்ந்திருந்தார்கள் மூவர் —
🙍♂️ ருத்ரன், 👦 மித்ரன், 🙎♀️ யஷ்வி.
இன்று அவர்கள் இந்தியா செல்ல
இருக்கிறார்கள்.
ருத்ரனும் மித்ரனும் தங்களது போன்களில் மூழ்கி இருந்தார்கள்.
அவர்களுக்குள் நடுவில் அமைதியாக அமர்ந்திருந்தாள் யஷ்வி.
திடீரென்று, அவள் கையில் இருந்த பையைத் திறந்து,
அதிலிருந்து விபூதியை எடுத்துக் கொண்டு நெற்றி முழுவதும் பட்டை இட்டுக் கொண்டாள்.
பிறகு, அதே பையில் இருந்த குங்குமத்தை எடுத்துக் கொண்டு
பெரிதாக நெற்றியில் வைத்துக் கொண்டாள்.
அங்கு போவோரும், வருவோரும் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றனர்.
ஆனால், அவள் அதையெல்லாம் கவனிக்கவில்லை.
கைகளைத் தலைக்கு மேல் கூப்பி, கண்களை மூடி,
மனமார கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்:
“முருகா, முருகா…
என்னை எப்படியாவது இந்தியாவுக்கு பத்திரமாக கொண்டு போய் சேர்த்துரு…
அங்கே வந்ததும் உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்…”
அவள் சத்தமாக வேண்டிக் கொண்ட குரலில்,
ருத்ரனும் மித்ரனும் திரும்பிப் பார்த்தார்கள்.
“ஏய், என்னடி பண்ணிட்டு இருக்க?” என்று மித்ரன் கேட்டான்.
சாமி கும்பிட்டபடியே அவனைப் பார்த்து,
“எனக்கு பயமா இருக்கு டா…” என்றாள் யஷ்வி.
அதை கேட்ட ருத்ரன் சற்று எரிச்சலுடன்,
“அதுக்குன்னு இப்படி பண்ணிட்டு இருப்பியா டி?” என்றான்.
“இல்லடா… பெரியப்பா சொன்னாரு…
சாமி கிட்ட வேண்டிக்கிட்டா எதுவும் ஆகாது…” என்றாள் அவள் நம்பிக்கையுடன்.
அதற்கு மித்ரன்,
“இதுக்கு நீ வராமலேயே இருந்திருக்கலாம்.
உன்னை யாரு வர சொன்னது? அடம் பிடிச்சு எங்களோட வந்துட்ட…” என்றான்.
அவள் உடனே அவனை முறைத்துக் கொண்டு,
“நீ என்னை இங்க விட்டுட்டு போறதில்லையே… இரு!” என்றாள்.
ருத்ரன் மெதுவாக,
“நாங்க சொல்றது ஏன் உனக்கு புரியல டி?” என்றான்.
அதற்கு யஷ்வி,
“எல்லாம் புரியுது…
உங்க ரெண்டு பேருக்குத்தான் புரியல…
எனக்கு உங்க ரெண்டு பேரையும் விட்டு இருக்க முடியாது…
அதனால்தான் வரேன்…” என்றாள்
யஷ்வி அப்படிச் சொன்னதும், ருத்ரனுக்கும் மித்ரனுக்கும் ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை. அவளது அந்தத் தூய்மையான அன்பின் முன்னால் அவர்களின் கோபம் கரைந்து போனது. ஆனாலும், சுற்றிலும் இருந்தவர்களின் பார்வையைத் தவிர்க்க எண்ணிய இருவரும், யஷ்வியை நெருங்கி
அவள் நெற்றியில் இருந்த அந்தத் தாராளமான விபூதியையும் குங்குமத்தையும் மெதுவாகத் துடைத்து அழித்தார்கள்.
“டேய்… ஏன்டா அழிக்கிறீங்க?” என்று பதறினாள் யஷ்வி.
“கொஞ்ச நேரம் சும்மா இருடி! நீ அமெரிக்காவிலேயே வளர்ந்தவன்னு சொன்னா ஊர்ல ஒருத்தன் கூட நம்ப மாட்டான். அந்த அளவுக்குப் பண்ணி வச்சிருக்க,” என்றான் மித்ரன் சலிப்புடன்.
“விபூதியை அழிச்சிட்டா அப்புறம் எப்படிடா சாமி நம்மளைப் பத்திரமா ஊருக்குக் கூட்டிட்டுப் போகும்?” என்று அவள் அப்பாவியாகக் கேட்க, ருத்ரன் குறுக்கிட்டான்.
“அதெல்லாம் மனசுல நினைச்சு வேண்டிக்கிட்டாலே போதும் யஷ்வி. சாமி நம்மளைக் கைவிடாது, நல்லபடியா கூட்டிட்டுப் போகும்,” என்று அவளுக்குப் புரியும்படி நிதானமாகச் சொன்னான் ருத்ரன்.
அவன் சொன்னதை ஏற்றுக்கொண்டவள், மெதுவாகத் தலையாட்டினாள். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, மித்ரனைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டாள்:
“டேய்… நாம வர்ற விஷயத்தை உங்க அம்மாகிட்ட சொல்லிட்ட இல்ல?”
மீத்ரன் அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, “நான் மட்டும் தான் எங்க வீட்டுக்குப் போறேன். நீ ருத்ரன் கூடத்தான் அவன் வீட்டுக்குப் போற,” என்றான் கறாராக.
அதிர்ச்சியடைந்த யஷ்வி ருத்ரனைப் பார்க்க, ருத்ரன் மித்ரனிடம் சீறினான்.
“ஏன்டா? நாங்க உன் கூட வர்றதுல உனக்கு என்ன இப்போப் பிரச்சனை?”
மித்ரன் குரலை உயர்த்தி, “டேய் ருத்ரா! நான் நேத்து சொன்னது உனக்கு இன்னும் விளங்கலையா?” என்றான்.
“நீ என்ன சொன்ன? உன் அக்காவுக்குக் கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்காங்க… அதுல உன் மாமா வீட்டுக்காரங்க ஏதோ வம்பு பண்றாங்க… அங்க நாங்க வந்தா நிலைமை இன்னும் மோசமாகும், எங்களுக்குப் பிரச்சனை வரும்னு தானே சொன்ன?” என்று ருத்ரன் படபடவெனப் பேசி முடித்தான்.
“அப்போ அவ்வளவு தெரிஞ்சும் நீங்க என் கூட வருவேன்னு அடம் பிடிக்கிறீங்களா?” என்று மித்ரன் ஆதங்கமாகக் கேட்க, ருத்ரன் அவன் தோளில் கை வைத்தான்.
“டேய்… அங்க என்னதான் நடக்குதுன்னு நாங்களும் பார்க்கிறோம்டா. நீ என்ன சொன்னாலும் சரி, நாங்க ரெண்டு பேரும் உன்னைத் தனியா விடப்போறது இல்லை.
உன் அக்கா கல்யாணத்தை முடிச்சுட்டு, அப்புறம் நாம மூணு பேரும் சேர்ந்து என் வீட்டுக்குப் போறோம். நான் ஏற்கனவே எங்க அண்ணாகிட்டப் பேசிட்டேன். ‘பெரிய லெவல்ல ஏதாவது பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லு, நான் பார்த்துக்கிறேன்’னு அண்ணன் சொல்லிட்டாரு. அதனால நீ எதைப் பத்தியும் பயப்படாத… எதுவும் நடக்காது!”
ருத்ரனின் அந்த உறுதி மித்ரனை சற்றே அமைதியாக்கியது.
நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, சென்னை நோக்கிய அந்தப் பிரம்மாண்டமான விமானத்தில் மூவரும் ஏறித் தங்களுக்குரிய இருக்கைகளில் அமர்ந்தார்கள்.
விமானம் மேகங்களுக்குள் பாயத் தயாரானது… அதே நேரத்தில் அந்த மூவரின் வாழ்க்கையிலும் புதிய திருப்பங்கள் காத்திருந்தன!
சரி, இந்த நண்பர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள நாமும் அவர்களுடனேயே சென்னைக்குப் பயணிப்போம்!