அவனை மேலிருந்து கீழ் ஒரு மார்க்கமாக பார்த்த அர்ஜுனோ, “என்னடா கலாய்க்கிறியா?” என்று கேட்க, “ச்ச ச்ச” என்றான் அவன்.
அர்ஜுனோ, “அத விடு, அங்கே எங்கயும் அக்சிடென்ட் பட்டு போலிஸ் ல சிக்காம தப்பி வந்து இருக்கியா என்ன?” என்று கேட்க, “என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?” என்று கேட்டான்…
“ஒரு மார்க்கமா தெரியுறதால தான் கேக்கிறேன்” என்று சொன்னவனை மேலிருந்து கீழ் பார்த்தவன், “அதெல்லாம் ஒன்னும் இல்லை, வீட்டை ரொம்ப மிஸ் பண்ணுற போல இருந்திச்சு” என்றான் நவநீதன்…
“இதெல்லாம் நம்புற போல இல்லை, அடுத்து என்ன செய்ய போறா?” என்று கேட்டான் அர்ஜுன்…
“நோ ஐடியா?” என்று அவன் தோள்களை உலுக்க, “நான் எல்லாம் எத்தன வயசுல கடை எடுத்து நடத்த தொடங்குனேன் தெரியுமா?” என்று கேட்க, “ம்ம் கேள்விப்பட்டேன், இப்போ நான் ஃபேக்டரி போகனும் அதானே” என்று கேட்டான்.
“ம்ம்” என்றான் அர்ஜுன்…
“என்னை வச்சு செய்யுறீங்க” என்று அவன் சொல்ல, “நீ அவ்ளோ பணத்தை வீணடிச்சுட்டு வந்திருக்க, ஆனாலும் உனக்கு யாரும் எதுவும் சொல்லாம இருக்காங்க, அதுவே பெரிய விஷயம், என் அப்பான்னா என்னை தூக்கி போட்டு மிதிச்சு இருப்பார், இங்க நான் டிக்ரீ முடிக்கலைன்னு அவ்ளோ திட்டு திட்டி தான் கடைய தந்தார்… உங்க வீட்ல யாருமே எதுவும் கேட்கல, அதுக்காகவாச்சும் ஏதாவது செய்யணும் ல, மாமா ரொம்ப வருத்தபடுறார்… விஜய்க்கு ஹெல்ப் ஆஹ் இருக்கலாமே” என்றான்…
அவன் சொன்னதும் நியாயமாக பட்டது நவநீதனுக்கு.
ஒரு வார்த்தை கடுமையாக கூட யாரும் பேசவில்லையே.
அவ்வளவு பணத்தை அவன் படிப்புக்கு அள்ளி கொடுத்து இருந்தான் கஜன்.
அவன் கூட எதுவும் சொல்லவில்லை…
இதற்கு மேல் பொறுப்பு இல்லாமல் தான் தோன்றி தனமாக இருப்பது சரி இல்லை என்று தோன்றியது.
அவனது லைலாவின் எண்ணம் வராமல் இருக்க, கொஞ்சம் தன்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தோன்ற, அர்ஜுன் சொன்ன போல ஃபேக்டரிக்கு செல்ல முடிவெடுத்து விட்டான்.
“ம்ம், அதுவும் சரி தான், நாளைக்கே விஜய் மாமா கூட ஃபேக்டரிக்கு கிளம்புறேன்” என்றான்.
அவனுக்கும் சும்மா இருப்பதை விட, எதிலாவது கவனம் செலுத்தினால் மனஅழுத்தம் குறையும் என்று தோன்றியது…
அர்ஜுனும், “தட்ஸ் குட்” என்று சொன்னவன், அனைவரிடமும் விடை பெற்று புறப்பட்ட கணம், “ஹேய் பெரிய மனுஷி” என்று அழைத்தான் யாழினியை.
எப்போதும் அவளுடன் வம்பிழுப்பதே அவனுக்கு வேலை…
அர்ஜுன் முன்னே வந்து நின்ற யாழினியும் இடுப்பில் கையை வைத்துக் கொண்டே, “என்ன மாமா?” என்று கேட்க, “அப்போ நான் கிளம்புறேன்” என்று சொல்ல, “கவனமா போயிட்டு வாங்க, ட்ரைவ் பண்ணும் போது முன்னுக்கு பார்த்து ஓட்டணும்” என்றாள்.
எட்டி அவள் கன்னத்தை கிள்ளியவன், “பெரிய மனுஷி தான் டி நீ” என்றான்.
“கிள்ளாதீங்க மாமா, எல்லாரும் கிள்ளிட்டே இருக்கீங்க” என்று சொன்னவள், உள்ளே சென்று அழகான பொம்மை ஒன்றை எடுத்து வந்து, “இது அப்பா நேத்து வாங்கி கொடுத்தார், என் கிட்ட நிறைய இருக்கு, அகல்யாவுக்கு கொடுங்க” என்றாள்.
அங்கே வந்த ராம்குமாரோ, “அவனோட சூப்பர் மார்க்கெட் ல அவ்ளோ பொம்மை இருக்கு, அவனுக்கு நீ கொடுத்து விடுறியா?” என்று கேட்க, அர்ஜுன் சிரித்துக் கொண்டே, அதனை வாங்கியவன், “சரிம்மா கொடுத்து விடுறேன், அப்படியே உன் அப்பா போலவே இருக்க” என்று அவள் கன்னத்தை தட்ட, “உங்க பையனும் உங்கள போல தான் னு அம்மா சொன்னாங்க” என்று சொல்ல, ராம்குமார் சத்தமாக சிரிக்க, அவன் குரலை செருமிக் கொண்டே, பிடரியை வருடியவன், ‘ஊரே அத தான் சொல்லுது’ என்று முணுமுணுத்துக் கொண்டே புறப்பட்டு இருந்தான்.
அடுத்த நாள் இருந்து நவநீதன் அவர்களது குடும்ப தொழிலில் இறங்கி விட்டான்…
முதல் போல பெண் சகவாசம் எல்லாம் இல்லை… அதில் ஆர்வமும் உண்டாகவில்லை…
சமூக வலைத்தளத்தில் எந்த கணக்கும் இல்லை…
எல்லாவற்றையும் அழித்து இருந்தான்.
வேலையில் மும்முரமாகவே அவன் இறங்கி இருக்க, கொஞ்சம் மனமுதிர்வும் பக்குவமும் சேர்ந்து வந்தது…
வருடங்கள் நகர்ந்தன…
அப்போது தான் தனிவுடன் திருமண சம்பந்தம் வந்தது…
திருமணம் என்று பேச்சு எடுத்ததுமே அவனுக்கு அவனது லைலாவின் நினைவு தான்…
ஏனோ அவளை முற்றாக மறந்து விட முடியவில்லை…
அவள் தனக்கு பொருத்தமில்லை என்று புத்தி சொன்னாலும், மனம் அவளை தான் நாடியது…
இதே சமயம் தனிஷாவின் குடும்பத்தை பற்றி அவன் வீட்டில் சொன்னார்கள்…
கேட்டுக் கொண்டான் அவ்வளவு தான்…
தனிஷாவின் எண்ணை கொடுத்தார்கள்…
அது சிங்கப்பூர் நம்பர்…
அவன் அழைக்க கூட இல்லை.
கல்யாண நாளும் நெருங்கியது…
அவள் புகைப்படத்தை கொடுத்தார்கள்…
அவன் திறந்து கூட பார்க்கவில்லை…
திருமணத்தில் இஷ்டமே இல்லை…
மறுப்பதற்கும் காரணம் இல்லை…
கொஞ்சம் கொஞ்சமாக வரப்போகும் மனைவியுடன் நெருங்கிக் கொள்ள நினைத்து இருந்தான்…
தாலி கட்டும் போது தான் பெண்ணையே பார்ப்பது என்று முடிவெடுத்தும் விட்டான்…
வீரராகவனும், தனேஷ்வரும் அவனிடம் பேசி விட்டு சென்றார்கள்…
சாதாரணமாக பேசினான் அவ்வளவு தான்…
முதல் போல அலட்டுவதும் இல்லை…
இயல்பான ஒரு முதிர்ச்சி அவனிடம் வந்து சேர்ந்து இருந்தது…
இதே சமயம், தனிஷாவும் அப்படி தான்…
அவனை பற்றி ஆராயக் கூட இல்லை…
அவள் முதல் காதல் இந்த நவநீதன்…
சட்டேன்று வெளியே வர முடியவில்லை…
அவனுடன் புது மாப்பிள்ளையை ஒப்பிட்டு பார்த்து விடுவேனோ என்று ஒரு சங்கடம்… அதனாலேயே தாலி கட்டும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று அவளுமே நினைத்து இருக்க, இப்போது மணமேடையில் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களுக்கு மயக்கமே வாராத குறை தான்…
தாலியும் கட்டி விட்டான்…
இனி அவள் தான் அவன் மனைவி…
அவன் தான் அவள் கணவன்…
தாலி கட்டி முடிய சம்பிரதயங்கள் நடைபெற்றன…
அவள் காலைப் பற்றி அவன் மெட்டி அணிவித்து விட வேண்டும்…
கொஞ்சமும் அவனுக்கு இஷ்டம் இல்லை…
வேறு வழி இல்லாமல் மண்டியிட்டு அமர்ந்தவன், தட்டு தடுமாறி மெட்டியை அணிவித்து இருக்க, அவளுக்கோ இருந்த ஆத்திரத்தில், அவன் கையை ஊன்றி மிதித்து விட்டாள்.
சுள்ளென்று வலித்தது…
ஏறிட்டு முறைத்துப் பார்த்தான்…
அவள் எங்கோ பார்த்தபடி நின்று இருந்தாள்…
ஒரு பெருமூச்சுடன் எழுந்து நின்று விட்டான்…
அதனை தொடர்ந்து பந்தி ஆரம்பமானது…
எல்லோரும் சாப்பிட சென்ற சமயம் அது…
அங்கே அமர்ந்து இருந்த தனேஷ்வரின் விழிகள் அழகான பெண்ணவளில் தான் படிந்து மீண்டன… அவள் தான் நெடுஞ்செழியன் மற்றும் கீர்த்தனாவின் மகள் ஹன்சா.
ஊதா வர்ண லெஹங்காவில் பட்டாம் பூச்சியாக அங்கும் இங்கும் திரிந்தாள்.
ஒரு பெருமூச்சுடன் இதழ் குவித்து ஊதிக் கொண்டவனின் விழிகள் அவளது முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தன…
அவள் முகத்தில் ஒரு பதட்டம்..
விழிகளை சுழற்றி தேடியவள் இறுதியில் தனேஷ்வரில் தான் பார்வையை நிலைக்க விட்டு இருந்தாள்.
அவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்க தனது கையில் இருந்த அலைபேசியை எடுத்து அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.
அவனும் புருவம் சுருக்கி மெசேஜ்ஜைப் பார்த்தான்.
மண்டபத்துக்கு பின்புறம் வரும்படி சொல்லி இருந்தாள்.
அவனும் பிடரியை வருடியபடி பின்னால் செல்ல , அங்கே சுவரில் சாய்ந்து நின்று இருந்தாள் பாவையவள்…
அவனையே பார்த்து இருந்தாள்.
“என்னடி??” என்று கேட்டவன் சுற்றும் முற்றும் பார்த்தபடி அவள் அருகே வர, “தனேஷ் ஐ திங்க் ஐ ஆம் ப்ரெக்னன்ட்” என்றாள் தவிப்பாக.
“வாட்??” என்று அதிர்ந்தவனுக்கு தூக்கி வாரிப் போட்டது…
“என்ன வாட் ??” என்றாள் அவள் கேள்வியாக.
“ஓஹ் மை காட்” என்று சொல்லிக் கொண்டே முகத்தை அழுந்த தேய்த்தவனோ, “அப்பாவுக்கு தெரிஞ்சா என்னை தூக்கி போட்டு மிதிப்பார் ஹன்சா” என்றான் தவிப்பாக…
“என் அப்பா கிட்ட பேசலாமா??” என்று கேட்டாள்.
“உனக்கு என் அப்பாவை பத்தி தெரியும் தானே… ஏதோ நான் உன்னை ஏமாத்தி ப்ரெக்னன்ட் ஆக்குன போலவே திட்டுவார்… நீ எல்லாருக்குமே பச்சை மண்ணு… உன்னை பத்தி எனக்கு தானே தெரியும்” என்று சொன்னவனோ சலிப்பாக நெற்றியை வருடிக் கொண்டே, “அன்னைக்கே இதெல்லாம் வேணாம்னு சொன்னேன் ல கேட்டியா ?” என்றான்.
“ஹேய் உன்னை யார் இவ்ளோ ஹாண்ட்ஸம் ஆஹ் இருக்க சொன்னது… தொபுக்கடீர்ன்னு விழுந்திட்டேன்… வேற யாரும் பொண்ணுங்க ஏரியா போட முதல் ஏரியா போட்டு வளைச்சு போட பார்த்தேன்.. இதெல்லாம் என் தப்பு இல்லை.. அழகா பிறந்த உன் தப்பு” என்றாள். இப்போது அவளை ஆராய்ச்சியாக பார்த்தவன் , “உண்மையை சொல்லுடி பிளான் பண்ணி தான் ப்ரெக்னன்ட் ஆகுனியா??” என்றான்.
‘அங்கிள் போலவே செம ஷார்ப் ஆஹ் இருக்கான்’ என்று நினைத்தவளோ, “ஆமா… நானும் எத்தனை நாளைக்கு வெய்ட் பண்ணுறது?? நீ எப்போ தொழில் கத்துக்கிட்டு… எப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கிறது?? அது தான்…” என்றாள்.
அவன் முகம் சட்டென இறுகியது…
“சோ ஏமாத்தி இருக்க ?” என்று கேட்டான்.
ஒரு மாதிரி ஆகி விட்டது… அவனையே பார்த்து இருந்தவள், “உன்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டேன்” என்றாள்.
இடையில் கையை வைத்து அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் சலிப்பாக இரு பக்கமும் தலையாட்டி விட்டு நகர, “ஹெலோ இப்படியே போனா என்ன அர்த்தம்??” என்று கேட்டாள்.
“இப்ப என்னடி பண்ண சொல்ற??” என்று எகிறிக் கொண்டே அவள் முன்னே வந்தான்.
“அங்கிள் மாதிரி உனக்கும் நிறைய கோபம் வருது தனேஷ்” என்றாள் அவனையே மிரட்சியாக பார்த்துக் கொண்டே.
“ஆஹ் நான் மட்டும் முழுக்க முழுக்க என் அப்பா போல இருந்த இந்நேரத்துக்கு உன் கன்னம் வீங்கி இருக்கும்… கொஞ்சம் என் அம்மா போலவும் இருக்கேன்.. அதான் உன்னை நிற்க வச்சு பேசிட்டு இருக்கேன்.” என்றான் எரிச்சலாக…
“இப்ப என்ன பண்ணுறது ??” என்று கேட்டாள்.
“அவ்ளோ பிளான் பண்ணுன தானே.. இதுக்கும் பண்ணு” என்றான்.
“சரி கிஸ் அடிச்சிட்டு போ… அப்போ தான் ஏதாவது ஐடியா வரும்” என்றாள்.
அவளை முறைத்துப் பார்த்தான்.
“அடிச்சிட்டு போடா” என்று சொல்லிக் கொண்டே அவன் ஷேர்ட்டை பற்றி இழுத்து இதழில் இதழ் பொருத்த அவனும் உஷ்ண பெருமூச்சுடன் விழிகளை மூடிக் கொண்டான்.
இதே சமயம், “எங்க இந்த ஆரண்யன காணோம்” என்று தேடி வந்த அர்ஜுனின் விழிகளோ அங்கே ஒட்டி நின்று எட்டிப் பார்த்த ஆரண்யனில் படிந்தது… ‘இவன் என்ன பார்த்திட்டு இருக்கான் ??’ என்று யோசித்தபடி எட்டி பார்த்த அர்ஜுனுக்கு தூக்கிவாரிப் போட்டது…
அவன் எட்டிப் பார்த்த நேரமும் ஹன்சிகா தனேஷ்வரின் ஷேர்ட்டை பிடித்து இழுக்கவும் நேரம் சரியாக இருந்தது… வேகமாக ஆரண்யனின் கண்ணை மூடி இருந்தான் அர்ஜுன்… இப்பொது அந்த முத்த காட்சியை பார்த்தது என்னவோ அர்ஜுன் மட்டும் தான்.
இதே சமயம் அர்ஜுனுக்கு பின்னால் வந்து எட்டிப் பார்த்த ராகவியோ, “மகன் கூட நின்னு பார்க்கிற சீனா இது?? சைக்” என்று திட்ட, “அவன் கண்ண தான் மூடி இருக்கேன் ல” என்றான் அவன் அங்கிருந்து ஆரண்யனை இழுத்தபடி மற்றப்பக்கம் வந்து கொண்டே…
“அவனை விடுங்க இப்படி கேவலமா ஒட்டி நின்னு பாக்கிறீங்களே” என்று ராகவி திட்ட, “அடிப்பாவி… நான் ஏன் டி வேணும்ன்னு இதெல்லாம் பார்க்க போறேன்.. அதுவா கண்ணுல விழுது” என்றான்.
அவனை முறைத்தபடி ஆரண்யனை இழுத்துக் கொண்டே அவள் செல்ல, ‘இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு இவ்ளோ துள்ளுறா??’ என்று நினைத்தபடி திரும்பவும் தனேஷ்வர் அங்கே வரவும் நேரம் சரியாக இருந்தது…
அர்ஜுனை கண்ட தனேஷ்வருக்கு நெஞ்சே அடைத்து விட்டது…
தனேஷ்வருக்கு பின்னால் வந்த ஹன்சிகாவோ இருவரையும் கடந்து தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல சென்று விட்டாள்…
அர்ஜுனை அதிர்ந்து பார்த்த தனேஷ்வரனோ, “எப்போ வந்தீங்க??” என்று கேட்டான்.
அவனை மேலிருந்து கீழ் பார்த்த அர்ஜுனோ, “ஆஹ் நீ கிஸ் அடிக்கும் போதே வந்திட்டேன்” என்றான்.
தனேஷ்வருக்கு இப்போது மயக்கம் வராத குறை தான்.
“எல்லாம் பாத்திட்டீங்களா??” என்று கேட்டான் அவன்…
“கிஸ் தானே…பார்த்தாச்சு பார்த்தாச்சு” என்றான் அவன்.
சட்டென அவன் கையை பற்றிய தனேஷ்வரனோ, “இத யார் கிட்டயும் சொல்லிடாதீங்க” என்று சொல்ல, அவனை மேலிருந்து கீழ் பார்த்த அர்ஜுனோ, “ஆஹ் ட்ரை பண்ணுறேன்” என்று சொல்லி விட்டு அகன்று விட்டான்.
தனேஷ்வரும் பெருமூச்சுடன் உள்ளே நுழையப் போனான்.
இதே சமயம், மேடையில் நின்று இருந்த தனிஷா அருகே வந்த ராகவியோ, “உன் தம்பிக்கு ஹன்சிகாவை நிச்சயம் பண்ணி இருக்கீங்களா என்ன??” என்று கேட்டாள்.
இப்போது அவள் புருவம் சுருங்க, “இல்லையே அண்ணி, அவங்க ஃப்ரெண்ட்ஸ் தான்” என்றாள்.
“ஃப்ரெண்ட்ஸ் கிஸ் அடிப்பாங்களா என்ன??” என்று விஷயத்தை அவள் காதில் போட்டு விட்டு செல்ல, தனிஷாவுக்கோ அதிர்ச்சி… அவள் அருகே நின்று இருந்த நவநீதனுக்கும் இது காதில் விழ, “ஓஹ் இது வேறயா??” என்று வாய்க்குள் முணுமுணுத்தான்.
அவனை முறைத்து விட்டு அலைபேசியை எடுத்தவள் , தனேஷ்வருக்கு மெசேஜ் அனுப்பினாள்.
அவனும் அப்போது தான் மண்டபத்தில் நுழைந்தவன் அவள் மெசேஜ்ஜை பார்த்து விட்டு மேடையேறி சென்று , “என்னடி??” என்றான் அவள் அருகே வந்தபடி…
“என்னடா பண்ணி இருக்க??” என்று பற்களை கடித்தபடி சீறினாள்.
அவனுக்கு எதுவுமே புரியவில்லை..
“என்ன பண்ணுனேன்” என்று கேட்க, “என்ன மச்சான் கிஸ் எல்லாம் அடிக்கிறியாம்” என்றான் நவநீதன் எட்டிப் பார்த்துக் கொண்டே கிண்டலாக…
தனேஷ்வருக்கு தூக்கி வாரிப் போட்டது.. அவன் வர முதல் செய்தி எப்படி வந்தது என்றே அவனுக்கு தெரியவில்லை…
‘இது ஏதோ ரேடியோ குடும்பம் போல’ என்று நினைத்தவன், “அப்படி எல்லாம் இல்ல” என்றான் மென்மையாக…
தனிஷாவோ, “பொய் சொல்லத்தடா, நீ பம்முறத பார்த்தா உன் மேல சந்தேகமா இருக்கு” என்று திட்ட,
நவநீதனோ, “நீ அடி மச்சான்.. உன் அக்கா பேச்சு எல்லாம் கேட்காதே… அவளும் எனக்கு கல்யாணத்துக்கு முதல் கிஸ் எல்லாம் அடிச்சு இருக்கா” என்று சொல்ல அவனை திரும்பி எரித்து விடுவது போல பார்த்தாள் தனிஷா…
தனேஷ்வரோ, ‘இங்களுக்குள்ள வேற ஏதோ சம்பவம் போலவே’ என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து நழுவி விட்டான்…
மேடையில் இருந்து சோர்வாக வந்தவனின் தோளில் கையை போட்ட அர்ஜுனோ, “என்ன தம்பி சட்டுன்னு சோகம் ஆயிட்டே… நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன், ஃபீல் பண்ணாதே” என்றான்…
அவனை மேலிருந்து கீழ் பார்த்த தனேஷ்வரனோ, “ஊரெல்லாம் சொல்லி என்ன நல்லா வச்சு செஞ்சிட்டு, சொல்ல மாட்டேன்னு அக்டிங் வேற” என்றான்…
“டேய், நான் யார் கிட்டயும் சொல்லவே இல்ல” என்றான்…
“தனிஷாவும் மச்சானும் கேட்டாங்க” என்று சொன்னான் அவன்…
“அதுக்குள்ளயா?” என்று கேட்ட அர்ஜுனுக்குமே அதிர்ச்சி…
“அப்போ நீங்க சொல்லலையா?” என்று கேட்டான் தனேஷ்வர்…
இல்லை என்று தலையாட்டிய அர்ஜுனோ யோசனையுடன், “அவ தான்” என்றான்… “யாரு?” என்று கேட்டான் தனேஷ்வர் பதட்டமாக… “என் பொண்டாட்டி டா” என்றான் அர்ஜுன்…
“அவங்க கிட்டயும் சொன்னீங்களா?” என்று பதட்டமாக கேட்டான். “நான் சொல்லல்ல, அவ தான் பார்த்தா” என்றான்…
“என்னது அவங்களும் பார்த்தாங்களா?” என்று கேட்ட தனேஷ்வருக்கு மயக்கமே வராத குறை தான்…