நந்திதாவும் யஷ்வியும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த ஜானகி,
“டீ குடிக்கிறீங்களாம்மா?” என்று கேட்டார்.
“இப்போ வேண்டாம் ஆன்ட்டி…” என்று நந்திதா மென்மையாக மறுக்க, அவர் சமையலறை நோக்கிச் சென்றார்.
அந்த நேரத்தில் உள்ளே வந்த மித்ரன்,
“ருத்ரன் எங்கே?” என்று கேட்டான்.
“தெரியலையே…” என்று யஷ்வி சொல்லி முடிக்கும் முன்பே, ருத்ரன் அங்கு வந்து சேர்ந்தான்.
“சரிடா மித்ரன்… கிளம்பலாம்!” என்றான் ருத்ரன்.
அதைக் கேட்ட யஷ்வி உடனே,
“எங்கடா போறீங்க?” என்று ஆவலுடன் கேட்டாள்.
“நாங்க ஆரியன் அண்ணாவோட ஆபீஸ்க்குப் போறோம்,” என்றான் ருத்ரன்.
“நானும் வரேன்டா!” என்று யஷ்வி துள்ளிக் குதிக்க,
“ஐயோ சாமி… நீ மட்டும் வேண்டாம்!” என்று மித்ரன் கிண்டலாகச் சிரித்தான்.
“ப்ளீஸ்டா… கூட்டிட்டுப் போங்க!” என்று யஷ்வி கெஞ்சலாகக் கேட்க,
ருத்ரன் அவளைப் பார்த்து,
“அங்க போய் நீ என்ன பண்ணப் போற?” என்றான்.
“சும்மா ஆபீஸைச் சுத்திப் பார்ப்பேன்… ப்ளீஸ்,” என்றாள் விடாமல்.
மித்ரன் ருத்ரனைப் பார்த்துச் சிரிக்க,
“சரி… வா!” என்று அனுமதித்தான் ருத்ரன்.
ஆரியனின் அலுவலகம்…
வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம்,
“ஆரியன் அண்ணாவைப் பார்க்கணும்,” என்றான் ருத்ரன்.
அந்தப் பெண் புன்னகையுடன்,
“சார் உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு… நீங்க நேரா மேலே போகலாம்,” என்றாள்.
உள்ளே வந்ததும் யஷ்வி,
“நீங்க போய்ப் பேசிட்டு வாங்க… நான் இங்கே சுத்திப் பார்த்துட்டு இருக்கேன்,” என்றாள்.
மித்ரன் ருத்ரனைப் பார்க்க, அவன் சற்றே யோசித்தான்.
“சரி… இங்கேயே இரு. தேவையில்லாம எங்கயும் போகாதே,” என்றான்.
அவன் குரலில் ஒரு சிறிய தயக்கம் தெரிந்தது. அவளைத் தனியாக விடுவதில் அவனுக்கு விருப்பமில்லை என்பது அவன் கண்களில் தெளிவாகப் பிரதிபலித்தது.
“ஏதாவது வேணும்னா உடனே கால் பண்ணு,” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு, லிப்ட் மூலம் மூன்றாவது மாடிக்குச் சென்றார்கள்.
அவர்கள் சென்றதும், யஷ்வி அந்த அலுவலகத்தின் நவீனத் தோற்றத்தை ஆச்சரியத்துடன் ரசிக்கத் தொடங்கினாள்.
ஆரியனின் அறை…
ருத்ரனும் மித்ரனும் கதவைத் தட்ட,
“யெஸ்… கமிங்!” என்ற ஆரியனின் கம்பீரமான குரல் ஒலித்தது.
அவர்கள் உள்ளே சென்றதும்,
“வாங்க… உட்காருங்க!” என்று வரவேற்றான் ஆரியன்.
“என்ன விஷயம்?” என்று கேட்டான்.
ருத்ரன் பேசத் தொடங்கினான்.
“அண்ணா… நாங்க புதுசா ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். அதுக்கு உங்க வழிகாட்டல் (Guidance) வேணும்,” என்றான்.
“ஓ… அப்படியா? ரொம்ப சந்தோஷம்! ஆல் தி பெஸ்ட்!” என்று உற்சாகப்படுத்திய ஆரியன், அவர்களின் திட்டத்தைப் பற்றி விரிவாகக் கேட்டறிந்தான்.
சில மணி நேர உரையாடலுக்குப் பிறகு, திருப்தியுடன் சிரித்தவன்,
“வெரி குட் டா! உங்க பிளான் சூப்பரா இருக்கு. இப்போதைக்கு எந்த மாற்றமும் தேவையில்லை. அப்படியே தொடங்குங்க. ஏதாவது பிரச்சனைன்னா நான் இருக்கேன்,” என்று உறுதியளித்தான்.
பிறகு பியூனை அழைத்து,
“மூணு டீ கொண்டு வாங்க,” என்றான்.
உடனே ருத்ரன்,
“அண்ணா… எங்க கூட ஒரு ஃபிரெண்டும் வந்திருக்கா. அவ கீழே வெயிட் பண்றா,” என்றான்.
“ஓ… சாரி! நாலு டீ கொண்டு வாங்க,” என்று மாற்றிச் சொல்லிய ஆரியன்,
“ருத்ரா… அவளை ஏன் கீழேயே விட்டீங்க? கால் பண்ணி உடனே மேலே வரச் சொல்லு,” என்றான்.
ருத்ரன் உடனே யஷ்விக்கு அழைத்தான்.
“என்னடி பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டான்.
“சும்மா போன் பார்த்துட்டு இருக்கேன்டா… நீங்க பேசி முடிச்சாச்சா? வீட்டுக்குக் கிளம்பலாமா?” என்றாள் யஷ்வி.
“ம்… போகலாம். நீ அப்படியே மூன்றாவது மாடிக்கு வா,” என்றான்.
“ஓகேடா…” என்று சொல்லியபடி யஷ்வி மின்தூக்கி (Lift) நோக்கி நடந்தாள்.
அதில் ஏறி, மூன்றாவது மாடிக்கான பொத்தானை அழுத்திவிட்டு நின்றாள்.
அந்த லிப்டில் அவள் மட்டுமே இருந்தாள்.
மெல்ல மேலே சென்று கொண்டிருந்த லிப்ட், இரண்டாவது மாடியை நெருங்கியபோது திடீரென ஒரு குலுக்கலுடன் நின்றுவிட்டது.
“அய்யோ!” என்று பதறிய யஷ்விக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
பயம் அதிகரிக்க,
“யாராவது இருக்கீங்களா? ஹெல்ப்… ஹெல்ப்!” என்று கதறியபடி கதவைத் தட்டினாள்.
அவளது குரல் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர்.
ஆனால் லிப்ட் இரண்டு தளங்களுக்கு நடுவில் சிக்கியிருந்ததால், கதவைத் திறக்க முடியவில்லை.
உடனடியாக அங்கிருந்த ஒருவர், ஆரியனின் உதவியாளர் தர்ஷனுக்குத் தகவல் தெரிவித்தார்.
பதட்டத்துடன் ஆரியனின் அறைக்குள் நுழைந்த தர்ஷன்,
“சார்… லிப்ட் பாதியிலேயே நின்னுடுச்சு. உள்ளே ஒரு பெண் சிக்கியிருக்காங்க!” என்றான்.
பேசிக் கொண்டிருந்த ஆரியன், ருத்ரன், மித்ரன் மூவரும் அதிர்ச்சியுடன் எழுந்தனர்.
“லிப்ட் ஆப்பரேட்டரை உடனே வரச் சொல்லுங்க!” என்று ஆரியன் உத்தரவிட,
தர்ஷன் ஏற்கனவே தகவல் சொல்லிவிட்டதாகக் கூறினான்.
மித்ரனின் முகம் வெளுத்துப் போனது.
“டேய்… லிப்ட்ல இருக்கிறது யஷ்வியா இருக்குமோ?” என்று ருத்ரனைப் பார்த்துப் பதட்டமாகக் கேட்டான்.
அந்த ஒரு வார்த்தை ருத்ரனை நிலைகுலையச் செய்தது.
“அவளுக்குப் போன் பண்ணுடா!” என்று ருத்ரன் கத்த,
மித்ரன் முயன்றான்.
ஆனால்,
“சிக்னல் கிடைக்கலடா… கால் போகவே இல்லை!” என்றான் பயத்துடன்.
“நீங்க ரெண்டு பேரும் லிப்ட் ஆப்பரேட்டர் ரூமுக்குப் போங்க. நான் இரண்டாவது மாடியில் பார்க்கிறேன்!” என்று ஆரியன் சொல்ல,
ருத்ரனும் மித்ரனும் படிகளில் வேகமாக ஓடினர்.
ஆரியன் இரண்டாவது மாடிக்குச் சென்றபோது அங்கே பெரும் கூட்டம் கூடியிருந்தது.
“விலகுங்க… கொஞ்சம் வழி விடுங்க!” என்று முன்னேறியவனுக்கு, உள்ளிருந்து யஷ்வியின் அழுகைச் சத்தம் கேட்டது.
அந்த மெல்லிய விம்மல் அவன் மனதை ஏதோ செய்யத் தொடங்கியது.
அவள் பெயரைச் சொல்லி அழைக்கத் தோன்றவில்லை. ஆனால், அவளது அழுகை அவன் இதயத்தைத் துடிக்க வைத்தது.
கதவின் அருகே நெருங்கிச் சென்ற ஆரியன் மென்மையாகப் பேசினான்.
“ஏய்… நான் சொல்றதைக் கேளு. அழாதே… உனக்கு எதுவும் ஆகாது. நாங்க எல்லாரும் வெளியேதான் இருக்கோம்.”
“இன்னும் கொஞ்ச நேரத்துல லிப்ட் சரியாகிடும். நீ பத்திரமா வெளியே வருவ. பயப்படாதே…” என்றான் உறுதியான குரலில்.
அந்தக் குரல் யஷ்விக்கு ஒருவித தைரியத்தைக் கொடுத்தது.
அழுகையை அடக்கிக்கொண்டு கதவருகே சாய்ந்து நின்றாள்.
ஆனால், இருட்டும் அந்தத் தனிமையும் மீண்டும் அவளை அச்சத்தில் ஆழ்த்தியது.
சிறிது நேர அமைதிக்குப் பிறகு, மீண்டும் அழத் தொடங்கினாள்.
தொடரும்…