மறுநாள் காலை…
அவந்திகா தன் அறையில் மும்முரமாக மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.…
இன்று அந்த டெண்டருக்கான கோப்பையை தயாரிப்பதில் முழு கவனத்தையும் செலுத்தியிருந்தாள்.
அதற்காக அடிக்கடி அதிரூபனின் அறைக்கும், தன் அறைக்கும் கோப்புகளை எடுத்துச் சென்று வந்தபடி இருந்தாள்.
அதை கவனித்துக் கொண்டிருந்த ரேவந்துக்கு, அவளை வம்பிழுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.…
கோப்பொன்றை எடுத்துக் கொண்டு நேராக அவள் மேசைக்கு வந்தான்….அலட்சியாமாக அவளை பார்த்து,
“இந்த ஃபைல் ஒரு மணி நேரத்துக்குள் என் டேபிள்ல இருக்கணும்.” என்றதும்
அவந்திகா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவனையும் அவன் கையில் இருந்த கோப்பையையும் பார்த்தவள்,
“சார் சொன்னா செய்வேன். நீங்க சொன்னா செய்ய முடியாது.” என அத்தனை தைரியமாக கூறியதும் பல்லை கடித்த ரேவந்த்,
“நான் சார் சார்பாத்தான் சொல்றேன்.”
“ஓஓ…அப்படியா? அப்போ சார் நேர்ல வந்து சொல்லட்டும். நான் உடனே செய்றேன்.”
என அவள் சொன்ன விதத்தில் ரேவந்த்தின் முகம் இறுகிப் போனது.…
பல்லைக் கடித்தபடி அவளை முறைத்தவன், எதுவும் பேசாமல் நேராக அதிரூபனின் அறைக்குள் நுழைந்து கொண்டான்…
அதிரூபனின் அறை…
கதவைத் திறந்தபடியே உள்ளே வந்த ரேவந்த்,
“ரூப்… அந்த மேனேஜர் ரொம்பத்தான் பண்றா!” என எடுத்த எடுப்பிலேயே குற்றம் சாற்றினான் அவந்திகா மீது…
மடிக்கணினியில் இருந்து பார்வையை உயர்த்திய அதிரூபன் புருவம் சுருக்கி ரேவந்த்தை பார்த்து ,
“ஏன்டா? அவ என்ன பண்ணா?” என புரியாது கேட்டதும்,
“இந்த ஃபைலை டைப் பண்ணிட்டு கொண்டு வான்னு சொன்னேன். அதுக்கு என்னையே எதிர்த்து பேசுறா. என்ன ஒரு திமிரு! இடியட்…”
அதிரூபன் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,
“அட… அந்த ஃபைலை நாம இன்னும் ரெடியே பண்ணிக்கிட்டு இருக்கோம்ல? அவ கிட்ட எதுக்கு கொடுத்த?”
“ம்ம்ம்ம்….சும்மா டெஸ்ட் பண்ணலாம்னு…”
“ப்ச்…வேற யாருக்காவது கொடுக்க வேண்டியதுதானே? அவளுக்கு ஏன் தேவையில்லாம வேலை கொடுத்து வம்பிழுக்குற?”
என அதிரூபன் சாதாரணமாக தான் கூறினான்…ஆனால் அவனது கூற்றை கேட்ட ரேவ்ந்த் அதிர்ச்சியாக அவனைப் பார்த்து,
“டேய்… நீ அவளுக்குச் சப்போர்ட் பண்றியா?” என சிறு அதிர்ச்சியுடன் கேட்டதும் சலிப்பாக தலையாட்டிய படி அவனை பார்த்த அதிரூபன்,
“நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணல. தப்பு யாரு மேல இருக்குன்னு சொல்றேன்.”
“ப்ச்…” என்று சலிப்பாக உதட்டைச் சுழித்த ரேவந்த் அவனை முறைத்துவிட்டு வெளியேறிவிட்டான்.
ரேவந்த் வெளியே சென்றதும், அதிரூபன் தலையசைத்தபடி மீண்டும் மடிக்கணினியை நோக்கி திரும்பினான்.
“இவனுக்கு ஏன் தான் அவளை பார்த்தா காண்டாகுதோ…” என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டான்.
சிறிது நேரம் கழித்து தன் வேலைகளை முடித்துவிட்டு ஒரு காபியுடன் கேன்டீனில் நின்றிருந்தாள் அவந்திகா…
அங்கே வந்த ரேவந்த் மீண்டும் அவளைச் சீண்ட ஆரம்பித்தான்…. ஏற்கனவே இவள் அவன் சொன்ன வேலையை செய்ய மறுத்து விட்டதோடு அவனிடம் திமிராக வேறு பேசியதில் கடுப்பாக இருந்தான்…
போதாக்குறைக்கு அதிரூபன் வேறு இவளுக்கு சப்போர்ட் செய்து பேசியதில் இன்னும் கோபத்தில் சுற்றி கொண்டு இருந்தவன் தற்போது அவந்திகாவை கண்டதும் மீண்டும் அவளை வம்பிழுக்கும் பொருட்டு,
“காபி குடிக்கிற நேரத்துல வேலை பார்த்தா இன்னும் நல்லா இருக்கும்.” என்றவனது குரலில் அமைதியாக ஒரு வாய் காபி பருகியவள் அவனை தலை திருப்பி நோக்கினாள்.…
அவறை கண்டதும் முகத்தை சலிப்பாக வைத்து கொண்டவள்,
“வேலை முடிச்சுட்டு தான் காபி குடிக்கிறேன்.”
“ஓஓ…அதை நான் எப்படி நம்புறது?” என தலை சாய்த்து அவன் கேட்ட தோரணையில் அவனது மண்டையை பிளக்கலாமா என வெறியே எழுந்தது அவளுக்கு…
அதை முகத்தில் காட்டாது சிறு புன்னகையுடன் தோளைக் குலுக்கியவள்,
“நம்ப வைக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல, சார்.”
அவ்வளவுதான்…
ரேவந்தின் முகம் மீண்டும் இறுகிப் போக, அவந்திகா அமைதியாக தன் காபியை முடித்துவிட்டு அங்கிருந்து நடந்து சென்று விட்டாள்…
அதன் பின் அவள் தயார் செய்து கொண்டு வந்த கோப்பினை முதல் ஆளாய் வாங்கி,
“இந்த ரிப்போர்ட்ல நிறைய மிஸ்டேக் இருக்கு.”என்றதும் பெருமூச்சை விட்டவள் மார்புக்கு குறுக்கே கரங்களை கட்டிக் கொண்டு,
“எங்கேன்னு சொல்லுங்க. இப்பவே சரி பண்ணிடுறேன்.”என நிமிர்வாக கேட்டதும் கோப்பையை மூடி வைத்தபடி,
“தேடிக்கோங்க.” என நக்கலாக கூறியவனிடம் இருந்து ஃபைலை வாங்கிப் பார்த்து,
“மிஸ்டேக் ரிப்போர்ட்ல இல்ல… படிக்கிறவரோட பார்வையில இருக்குன்னு நினைக்கிறேன்.” என்றதும் அதிரூபனை காண வந்து இருந்த அங்கு பணிபுரியும் சிலர் அங்கு நின்று இருந்தனர்…
அவந்திகாவின் பதிலில்
அங்கு இருந்தவர்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டு ரேவந்த்தை பார்த்து வைத்தனர்…
இதே போல தான் அவந்திகா அதிரூபனின் அறைக்கு சென்று டெண்டருக்கான கோப்பை சமர்பித்து விடலாமா என கேட்டு கொண்டு இருந்தாள் ..
அந்நேரம் அங்கு வந்த ரேவந்த்,
“பைல் ரெடி பண்ணி தந்துடீங்கனா வேற வேலையை பாருங்க…மீதி நாங்க பார்த்துக்கிறோம்…” என எள்ளலாக கூறியதும் அவனை திரும்பி பார்த்த அவந்திகா,
“உங்களுக்கு வேற வேலையை இல்லையா??… என்னை நோட் பண்ணிட்டு இருக்கறது மட்டும் தான் உங்களுக்கு இருக்க ஒரே வேலையா?” என பேச ஆரம்பித்ததும் அதிரூபன் இருவரையும் முகம் சுருக்கி பார்த்தவன்,
“என்ன பிரச்சனை?” என கேட்டு வைத்தான் சற்று அதட்டலாக…
முதலில் முந்திக் கொண்ட ரேவந்த்,
“இந்த மேடமுக்கு அட்வைஸ் ஏத்துக்கத் தெரியாது பாஸ்..எது சொன்னாலும் ஏட்டிக்கு போட்டியா தான் பேசுவாங்க .” என்றதும் பொறுமை இழந்த அவந்திகா,
“தேவை இல்லாத அட்வைஸை ஏத்துக்க மாட்டேன்.”
“பார்த்தீங்களா பாஸ்?”
அதிரூபன் அமைதியாக,
“இரண்டு பேரும் ஆபீஸ்ல இருக்கீங்க…ஸ்கூல்ல இல்ல. வேலையை மட்டும் பாருங்க.” என சற்று அதட்டலாக உரைத்ததும் இருவரும் அமைதியாகி விடுகிறார்கள்…
அன்று நடைபெற்ற டெண்டர் போட்டியில் அதி குரூப் ஆஃப் மெட்டல்ஸ் வெற்றியைத் தட்டிச் சென்றிருந்தது.…
அந்தச் செய்தி நிறுவனமெங்கும் பரவியதும், ஒவ்வொரு ஊழியரின் முகத்திலும் பெருமையும் மகிழ்ச்சியும் மலர்ந்தது.
அலுவலகம் முழுவதும் வாழ்த்துச் சத்தங்கள் ஒலித்துக் கொண்டிருக்க, அதிரூபனின் இதழ்களில் வழக்கமான அந்த வெற்றிப் புன்னகை கம்பீரமாக விரிந்திருந்தது.…
அந்த நேரத்தில், தன் காதலியான ரேவந்த்தை நோக்கி வேகமாக நடந்தவன், அவனை இடையோடு அணைத்துத் தூக்கி ஒரு சுற்று சுற்றி,
“ரொம்ப சந்தோஷமா இருக்கு ரே! எனக்குத் தெரியும்… இந்த டெண்டர் நம்மளுக்குத்தான் கிடைக்கும்னு…பார்த்தியா… நாம ஜெயிச்சுட்டோம்!”
அவனைப் பார்த்து சிரித்த ரேவந்த், அவன் கன்னத்தை மெதுவாக வருடி,
“எனக்கும் தெரியும், ரூப்… இந்த வெற்றி உனக்குத்தான் சொந்தம். இதுக்கு தகுதியானவன் வேறு யாரும் இல்லை.”
அவனது கண்களை ஆழமாகப் பார்த்தவன் மேலும் தொடர்ந்தான்,
“இந்த வெற்றிக்கு தகுதியானவன் நீ மட்டும் தான். வெற்றி உன்னைத் தேடி வரும், ரூப்… நீ அதைப் பின்னால் ஓட வேண்டிய அவசியமே இல்லை.”
சிறிது இடைவெளி விட்டவன் புன்னகையுடன் ,
“இந்த உலகத்தையே ஜெயிக்கப் பிறந்தவன் நீ. உன் உழைப்புக்கும், உன் திறமைக்கும் தோல்வி என்ற வார்த்தையே கிடையாது.”
அவனது வார்த்தைகளைக் கேட்ட அதிரூபனின் முகம், சிறு குழந்தையைப் போல மகிழ்ச்சியில் பூத்துக் குலுங்கியது.
அந்த மகிழ்ச்சியின் உச்சியில், ரேவந்த் மெதுவாக அவனது நெற்றியில் குனிந்து ஒரு முத்தமிட்டான்…
அதிரூபன் அவனை இன்னும் நெருக்கமாகத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
அந்த அழகான தருணத்தை…
டக்… டக்…
கதவைத் தட்டிய சத்தம் கலைத்தது.
“எக்ஸ்க்யூஸ் மீ, சார்…”
என்ற பெண் குரல் கேட்க, இருவரும் ஒரே நேரத்தில் கதவை நோக்கித் திரும்பினர்.
கதவை மெதுவாகத் திறந்தபடி உள்ளே நின்றிருந்தாள்…
அவந்திகா.…